மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
‘‘ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப் புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர், வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக் கொண்டார். மாண்டிய மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.
அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் ஒரு நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின் மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் ‘அம்மு’ என்று அறியப்பட்டவர். அரசியல் உலகில் ‘அம்மா’ என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘பிரதமர்’ வேட்பாளர் என்று தன்னை பிம்பப்படுத்தியது ஒரு பெருஞ்சாதனை!
போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப் பெருமையைக் கரைத்துக் கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம் போகாத கிளியின் சிறகைப் போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர் தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.
உறுதி என்பது அவர் உடன் பிறந்தது. ஒரு முறை கர்நாடகத்தில் நடந்த படப்பிடிப்பின்போது கன்னட போராளிகளால் சூழப்பட்டார். ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று முழங்குமாறு வற்புறுத்தப்பட்டார். ‘கன்னடம் வாழ்க’ என்று சொன்னாலும் சொல்வேனே தவிர எந்த நிலையிலும் ‘தமிழ் ஒழிக’ என்று கூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும் வழிமாறாதவர், மொழி மாறாதவர் ஜெயலலிதா!
கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை, அழியாதவை! அவரை தவிர யாரும் ஆட முடியாது என்ற நடனங்களும், அவரை தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு சௌந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். ‘ஆயிரத்தில் ஒருவனி’ல் அவரது அழகு சந்தன சிலையா, சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.
சந்தியாவின் மகளாய் பிறந்தார், இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோருக்கும் வாய்க்காது இந்த சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்த புகழ் மொழியை சொல்ல முடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேன் என்ற துயரம் இறப்பின் வலியை இரு மடங்கு செய்கிறது.
#Vairamuthu #MadhanKarky #KabilanVairamuthu #Sivakumar #Jayalalitha #ChiefMinister #Suriya #Karthi
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் வெளியாகும் சூழ்நிலை...
ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்...